செங்கல்பட்டு: தை மாதம் முதல் முகூர்த்தம் என்பதால் திருப்போரூர் முருகன் கோயிலில் இன்று ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருள்மிகு கந்தசாமி திருக்கோயில் பழமை வாய்ந்த தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. சில வருடங்களுக்கு முன்பு கோயில்களில் ஒரு சில திருமணங்கள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது பொருளாதார வளர்ச்சியில் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தும் விதமாக கோயில்களில் திருமணம் செய்வது வழக்கமாகி வருகிறது.
அதில் புதிய உச்சமாக தை மாதம் முதல் முகூர்த்தம் என்பதால் இன்று ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. குறிப்பாக இன்று காலை 9 மணி முதல் 10:30 மணி வரை சுபமுகூர்த்தம் என்பதால் இந்த ஒரு மணி நேரத்தில் 88 ஜோடிகளுக்கு திருப்போரூர் கோயில் வளாகத்தில் திருமணம் நடைபெற்றது.
இதற்காக கந்தசாமி, முருகன், வள்ளி மற்றும் தெய்வானை ஆகியோர் அலங்கரிக்கப்பட்டு ஆறு இடங்களில் வைக்கப்பட்டனர். அந்தந்த இடங்களில் திருமண ஜோடிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் திருக்கோயிலில் பணி செய்யும் பட்டாச்சாரியார்கள் மந்திரங்கள் ஓத நாதஸ்வரம் மேளதாளங்களுடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு வருகை தந்த பொதுமக்கள் திருப்போரூர் முருகன் கோயிலில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் திருப்போரூர் முருகன் கோயில் விழா கோலம் கொண்டுள்ளது.