திருப்பத்தூர்: மதுபோதையில் பள்ளி மாணவிகளை கேலி கிண்டல் செய்த இளைஞர்களை தட்டிக் கேட்டவரை, சரமாரியாக தாக்கிய இளைஞர்களின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாணியம்பாடியை அடுத்த அரப்பாண்டகுப்பம் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி, கூலி வேலை செய்து வருகிறார். இவர் இன்று பணி முடித்து, வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, தும்பேரி கூட்டுச்சாலையில், மதுபோதையில் இருந்த இளைஞர்கள் சிலர் அவ்வழியாக சென்ற பள்ளி மாணவிகளை கேலி கிண்டல் செய்துள்ளனர்.
அப்போது, இதனை கண்ட ராமமூர்த்தி இளைஞர்களை தட்டிக் கேட்ட போது ஆத்திரமடைந்த இளைஞர்கள், ராம மூர்த்தியை இருசக்கர வாகன சாவியால் முகத்தில் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் ராமமூர்த்திக்கு படுகாயம் ஏற்பட்ட நிலையில், உடனடியாக அவரை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இச்சம்பவம் குறித்து அம்பலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, ராமமூர்த்தியை தாக்கிய இளைஞர்களை தேடி வருகின்றனர்.